தமிழ்-முஸ்லிம்களிடையே இணக்கப்பாடு அவசியம்
வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே ஒரு இணக்கப்பாடு வரவேண்டியது அவசியமாகுமென எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு தாண்டவன் வெளி பேடினன்ட் மண்டபத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் தொடர்ந்துரையாற்றிய அவர் ,
வட கிழக்கு இணைப்ப சம்பந்தமாக ஒரு முடிவு வரவேண்டும். வட கிழக்கு இணைக்கப்பட்ட போதிலும் கூட நிரந்தரமாக முழுமையாக இணைக்கப்படவில்லை. ஒரு தற்காலிகமான இணைப்பாகத்தான் இருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாக தற்போது வட கிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வட கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் தான் வட கிழக்கு இணைக்கப்பட்டது.
வட கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே ஒரு இணக்கப்பாடு வரவேண்டியது அத்தியாவசியமாகும்.
மர்ஹும் அஷ்ரப் அவர்களுடைய காலத்தில் நாங்கள் பேசி சில ஒழுங்குகளை செய்திருந்தோம். வட கிழக்கு மாகாணம் தென் கிழக்கு மாகாணம் அதிகாரங்கள் சம்பந்தமாக சில ஒழுங்குகளை செய்திருந்தோம்.
அதனடிப்படையில் விட்டுக் கொடுப்புடன் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் தமது சந்ததியின் நலன் கருதி இவ்விரு சமூகங்களும் பக்குவமாக பாதுகாப்பாக உரிமையுடன் வாழ வேண்டும் நோக்கத்தை கருத்தில் கொண்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.
அந்த விடயங்கள் சம்பந்தமாக சேவேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றோம். அந்த பேச்சுக்கள் ஆழமாக நடைபெற்று முடிவுக்கு நாங்கள் வரவேண்டும்.
அது ஒரு முக்கியமான விடயம் அதற்கு தமிழ் மக்களின் உதவி எங்களுக்கு தேவையாகும்.சமஷ்டி ஆட்சி முறை நல்ல ஆட்சி முறையாகும் மத்தியில் கூட்டாட்சி மாகாணங்களில் பிராந்தியங்களில் சுய ஆட்சி இது ஒரு சிறந்த ஆட்சிமுறையாகும்.
நாங்கள் நாட்டை பிரித்துக் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களை எமது பாதுகாப்பை உறுதி செய்து எமது கௌரவத்தை பாதுகாத்து சுய கருமங்கள் தொடர்பாக தமது தலைவிதியை தீர்மானிக்க கூடிய தீர்வைத்தான் நாங்கள் கேட்டோம்.
உலகத்தில் வெவ்வேறு நாடுகளில் ஐரோப்பாவில், ஆபிரிக்காவில், அமெரிக்காவில், அவுஸ்திரேலியாவில் இந்தியாவில் பல் வேறு நாடுகளில் இருக்கின்ற ஆட்சி முறையின்படி ஒரு அரசியல் தீர்வை தான் நாங்கள் கேட்டோம். வேறெதையும் நாங்கள் கேட்கவில்லை.
தற்போதுள்ள அரசாங்கம் ஒரு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் கடமையில் ஈடுபட்டுள்ளது.அதில் நாங்கள் பக்குவமாக, நிதானமாக சர்வதேச சமூகம் எமது நிலைப்பாட்டை தெளிவாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சிங்கள மக்கள் மத்தியில் எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமளிக்காமல் ஒருமித்த நாட்டுக்குள் பிரிபடாத நாட்டுக்குள் தமது நீண்ட கால அபிலாசையான நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் சுய ஆட்சியை கேட்டிருக்கின்றோம்.
எம்மை பொறுத்தவரைக்கும் இந்த அரசியல் தீர்வு எமக்கு தேவை இந்த புதிய அரசியல் தீர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதம ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தேவை.
இந்த நாட்டின் கடன் சுமையை இந்த நாட்டினால் தாங்க முடியாது. இந்த நாட்டின் வருமானத்தில் 70 வீதமான வருமானம் கடன் சுமையை குறைப்பதற்காக செலவு செய்யப்படுகின்றது.
இந்த நாடு கடன் சுமையிலிருந்து மீட்கப்படுவதாக இருந்தால் இந்த நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டுமாக இருந்தால், இந்த நாட்டில் வெளிநாட்டு முதலீடு வரவேண்டுமாக இருந்தால் உள் நாட்டு முதலீடு நடைபெற வேண்டுமாக இருந்தால், இனப்பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். இந்த நாட்டில் நிரந்தரமான சமாதானம் சமத்துவத்தின் அடிப்படையில் ஏற்பட வேண்டும்.
பேச்சுவார்த்தையின் போது அடிப்படை விடயங்களை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. ஆனால் சில விடயங்களை விட்டுக் கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்களும் விட்டுத்தர வேண்டும். நாங்களும் விட்டுக் கொடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்கு பாதிப்பில்லாமல் இந்த கருமத்தை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வழியை நாங்கள் காண வேண்டும்.
இறைவனின் உதவி எங்களுக்கு தேவை.இறைவன் கையில்தான் எல்லாம் தங்கியிருக்கின்றது. எல்லாம் அவன் செயலாகும். நாங்கள் இறைவனின் கருவிகளாகும்.
மட்டக்களப்பு மாவட்டம் முக்கியமான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் வாழும் மக்களில் 75 வீதமான மக்கள் தமிழ் மக்களாகும்.இன்றைய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும். ஒருமித்து நிற்க வேண்டும். 1956 ஆம் ஆண்டு ஒற்றுமையாக ஒரு மித்து நின்றதன் காரணமாகத்தான் நாங்கள் இன்று இந்த அந்தஸ்த்தை அடைந்திருக்கின்றோம்.
இன்றைய இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் இழக்கக் கூடாது. இந்த வாய்ப்பினை இழந்துவிடக்கூடாது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வருமென்று நாம் எதிர் பார்க்க முடியாது.
லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியும் ஐக்கிய தேசியக் கட்சியும் எங்களின் ஆதரவுடனும் சேர்ந்து இன்று இந்த அரசாங்கத்தினை நடாத்துகின்றனர். இந்த நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறக் கூடிய நிலைமை இருக்கின்றது.
ஜே.வி.பியும் ஆதரிக்க கூடிய நிலைமை இருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் சர்வஜன வாக்கெடுப்பிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். ஆகையால் நாங்கள் ஒற்றுமையாக ஒரு மித்து நிற்கவேண்டும்.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவின் மூலமாக நாம் ஒருமித்து ஒற்றுமையாக நிற்கின்றோம் என்பதை இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏனையோருக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக் கூடிய நிலைமை இருக்க வேண்டும்.
எமது வெற்றிக்காக நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும். ஒற்றுமையாக நிற்பது உங்களது புனிதமான கடமையாகும். அந்தக் கடமையிலிருந்து நீங்கள் தவறக்கூடாது என நான் கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.
-MC Nijamudeen –