• Sat. Apr 4th, 2026

தினகரன் புதிய அமைப்பை தொடங்கினார் – அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்..!

Byadmin

Mar 15, 2018

(தினகரன் புதிய அமைப்பை தொடங்கினார் – அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்..!)

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. 3 அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைக்கப்பட்டன. ஆனால் டி.டி.வி. தினகரன் அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் புதிய கட்சி தொடங்கி ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தும் விழா மதுரை மாவட்டம், மேலூரில் இன்று காலை நடைபெற்றது. மேலூர்-அழகர் கோவில் ரோட்டில் எஸ்.பி.ஆர். திடலில் இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு மேடைக்கு வந்த தினகரன் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர், தினகரன் தனது புதிய அமைப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். விழா திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். கருப்பு,வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக, மதுரையில் இருந்து பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்க வந்த தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக கொடி தோரணங்கள் அமைத்து வரவேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *