(மஹரகம வைத்தியசாலையின் பெட் ஸ்கேனர் மக்கள் பாவனைக்கு)
தனவந்தர்களின் உதவியுடன் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் பெட் ஸ்கேனர் இயந்திரத்தின் சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பெட் ஸ்கேனர் இயந்திரம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் பொதுமக்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.
குறித்த இயந்திரத்திற்காக கதீஜா பவுன்டேஷன் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எச்.மொஹமட் மற்றும் ஊடகங்களின் பங்களிப்புடன் பொதுமக்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியுதவிகள் சுகாதார அமைச்சிடம் வழங்கப்பட்டிருந்தன.
அதன்படி அமைச்சரவை அனுமதியுடன் ஜெர்மன் நாட்டின் சிமன்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குறித்த இயந்திரம் 202 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதுடன் அதனை குறித்த இடத்தில் பொருத்தும் பணிகளில் ஜெர்மன் நாட்டின் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த குறித்த பெட் ஸ்கேனர் இயந்திரம் மூலம் புற்றுநோயை சரியாக இனங்காண முடியும் எனவும் மாதத்திற்கு 100 ஸ்கென்களுக்கும் அதிகமாக மேற்கொள்ள முடியும் எனவும் ஏப்ரல் 1ம் திகதி பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் புற்றுநோயாளர்களுக்கான சேவையை தரமாக வழங்க முடியும் எனவும் மஹரகம புற்றுநோய் வைத்தயசாலையின் பணிப்பாளர் வில்ப்ரட் குமாரசிறி தெரிவித்துள்ளார்.