• Sun. Oct 12th, 2025

கடல் அலையில் சிக்கி மாணவன் வபாத், உயிருக்கு போராடிய மற்றொருவர் மீட்பு

Byadmin

Jan 8, 2023

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை மாலை 06.01.2023 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் கற்கும் மாணவனான மனாப்தீன் அப்துர் றஹ்மான் (வயது 19) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இம்மாணவனும் அவரது குடும்பத்தினரும் சனிக்கிழமை ஏறாவூர் சவுக்கடி கடற்கரைக்குச் சென்று தனது சகோதரருடன் கடலில்  குளித்துக் கொண்டிருக்கும்போது பாரிய அலையொன்றினால் இருவரும் அள்ளுண்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சற்று நேரத்தில் கடற்கரையை நோக்கி வந்த பாரிய அலையின் மூலம் கடலில் மூழ்கிய இருவரும் கரையொதுங்கியுள்ளனர்.

அவ்வேளையில் அப்துர்றஹ்மான் என்பவர் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளார்.

அதேவேளை இவருடன் கூடவே கடலில் மூழ்கிய நிலையில் பாரிய அலையினால் கரை ஒதுக்கப்பட்ட சகோதரரான மாணவன் உபைதீன் றஹ்மான் (வயது 17) என்பவர் உயிருக்குப் போராடிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *